RSS

Aids kavithai in tamil

நெருப்பென்று தெரிந்திருந்தும்
-------- நெய்யூற்றி வந்ததனால்
-------- நிரந்தரமாய் நீயதிலே எரிகின்றாய் - இன்று
சருகாகி சவக்குழியில் சரிகின்றாய்

நறுமணமாய் எண்ணி நிதம்
-------- நாற்றத்தை ஏற்றதனால்
-------- நிலையிழந்து நீயின்று விழுகின்றாய் - உடல்
உறுப்பெல்லாம் நோய்வந்து அழுகின்றாய்

ஆசைகளை அடக்காமல்
-------- அலையவிட்ட காரணத்தால்
-------- அழிந்துவரும் உன்னுயிர்க்குப் பிடியில்லை - நீ
ஓசையிடும் புலம்பலுக்கும் முடிவில்லை

பெரும்சுகத்தை எதிர்ப்பார்த்து
-------- பெரும்நோயை பெற்றுவிட்டாய்
-------- பெற்றவுடன் யோசித்துப் பயனில்லை - இதற்கு
மருந்தில்லை என்பதனால் தினம்தொல்லை

கவலையெனும் வீட்டக்குள்
-------- கண்ணீரால் குழிதோண்டி
-------- கல்லறையை உனக்குள்ளே கட்டுகிறாய் - அதன்மேல்
அவலத்தைப் பூக்களாகக் கொட்டுகிறாய்

உயிரணுவைச் சிதைக்கின்ற
-------- உயிர்க்கொல்லி நோய்வந்தால்
-------- ஒருவரோடு முடியுமென நினைக்காதே - பலரின்
உயிர்க்குடிக்கும் என்பதை நீ மறக்காதே

கொல்லுகின்ற முடிவோடு
-------- குறிஉன்மேல் வைத்து விட்டால்
-------- கருவறையில் இருந்தாலும் தாக்கிவிடும் - இந்நோய்
கல்லறைக்குள் மறைந்தாலும் தூக்கிலிடும்

உணர்ச்சிகளின் கோட்டைக்குள்
-------- உருவாகும் விளையாட்டை
-------- உரிமையுள்ள ஒருவரிடம் விளையாடு - அதை
பணம் கொடுத்து ஆடுவதைத் தடைபோடு

உயிர்க்கொல்லி நோயின்று
-------- உலகத்தைக் கெடுத்தாலும்
-------- ஒழுக்கம்தான் இந்நோய்க்கு முதல்மருந்து - இதுஉன்
உயிர்ப்பறிக்க வருமுன்னே நீ திருந்து!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment