RSS

Paravai kavithai - vaalkai kavithaigal in tamil

ஒரு பறவையின் சிறகிலிருந்து
பறவைக்கே தெரியாமல்
பத்திரமாய் படியிறங்கியது
உதிர்ந்து போன
அந்த ஒற்றை இறகு

உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது

உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது

சுதந்திரம் என எண்ணி சுகமாக
காற்றில் மிதந்த இறகு
கடைசியாய் சேர்ந்த இடம் மலம்
மலம் என்றால் மனித கழிவு

மனந்தளராத இறகு
கழிவுகளோடும்
கனவுகளோடும் பயணப்பட்டது
கடலுக்கு

கடக்கும் வழியெல்லாம்
கலந்துக்கொண்டே இருந்தது
கழிவுகள்

தூரத்துச் சொந்தமாய் தொழிற்சாலைக் கழிவு
அடுத்தவீட்டுக் காரனாய் அணுக்களின் கழிவு
கடங்காரனாய் கதிரியக்க கழிவு

முகம் சுளித்தது இறகு
மனித கழிவுகளைக் கண்டுஅல்ல
மனிதனே கழிவுகளென்று

ஒரு சூறைக்காற்றில்
சுனாமி அடித்த
சுடுகாட்டுக் கடற்கரையில்
சுற்றி விழுந்தது இறகு...

சுயநினைவுப் பெற்று பார்த்தபோது
சுற்றி இருந்த மனிதர்கள்
இல்லை
சுற்றிலும் இறந்த மனிதர்கள்

அப்பாவி உயிர்களின்
ஆயுள்ரேகைகளை அழித்த
அகங்காரம் கொண்ட அலைகளைப் பார்த்து
அச்சத்தில் அழுதது இறகு

தன்னைத் தவிர
தண்ணீரையும் தவிர
வேறெதுவும் அசையாமல் கிடந்ததைக் கண்டு
இறகின் கண்ணீர் இரட்டிப்பனாது

இயற்கையை அழிக்கிறார்கள் மனிதர்கள்
மனிதர்களை அழிக்கிறது இயற்கை
இது ஏதோ
கொடுக்கல் வாங்கலின் குறைபாடு என
குழப்பத்தில் தவித்தது இறகு

அங்கு
அசையும் நிலையில்
இறகு மட்டுமே இருந்தது
அசைக்கும் நிலையில்
அலைகள் மட்டுமே இருந்தது

அசைந்தது அலை
அதில் அசைந்தது இறகின் நிலை

பிடிப்பட்ட மனிதர்களோடும்
அடிப்பட்ட மீன்களோடும்
இடிப்பட்டுக் கொண்டே மிதந்து
இழுக்கப்பட்ட இறகு

மனிதர்களுக்கு உணவாகும் மீன்களுக்கெல்லாம்
மனிதர்களே உணவாகிப் போன
மாற்றம் கண்டு
மயக்கம் வந்தது இறகிற்கு

மயக்கம் தெளிந்து
இறகு எழுந்த போது
எல்லாம் அடங்கி இருந்தது
அதற்குள்
எல்லாமே அடங்கி இருந்தது

நிவாரணக் கணக்கில்
இறப்பும் இருந்தது
இறகும் இருந்தது
அப்போதுதான்
மனிதர்களைப் பற்றி இறகிற்கு
முழுமையாக புரிந்தது!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment